- Thread Author
- #1
அரிசி பொரி உருண்டை
எனக்கு பிடித்த உணவு மிக மிக சாதாரணமாக வீட்டில் இருப்பதை வைத்து சமைக்க கூடிய உணவாக தான் இருக்கும். டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று அங்கு பொருள் வாங்கி வந்த பின் தான் செய்து ஆக வேண்டும் என்ற எந்த வித பொருளையும் நான் சொல்ல மாட்டேன்.
இந்த சமையல் குறிப்பு என்னுடையது என்பதை விட என் அம்மாவின் கை பக்குவத்தால் அவர் செய்து கொடுத்த பொரி அரிசி உருண்டை… சிற்றுண்டி… இப்படி சொன்னால் சரியாக இருக்கும்..
இதனின் பெயர் பொரிஅரிசி உருண்டையா..? உண்மையில் எனக்கு சரியாக தெரியாது.. ஆனால் என் அம்மா அப்படி தான் நாற்பது வருடத்திற்க்கு முன் சொன்னது.. அப்போது எல்லாம் மழை என்று பெய்தால் கூட மின்சாரம் துண்டிப்பும் இரட்டை கிளவியாக ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு தான் நிகழும்..
இந்த காலம் போல் டிவி.. அதில் அத்தனை சேனல் என்பது இல்லை.. அதே போல கையில் கை பேசி கிடையாது.. பள்ளியையும் விடு முறை விட்டு விடுவர்.
ஆண் பெண் பேதம் இல்லாது அனைவரும் கூடி தான் விளையாடுவோம்.. மழை காலத்தில் வராண்டாவில் அனைத்து வீட்டு பிள்ளைகளும் எங்கள் வீட்டில் விளையாடும் போது.
என் அம்மா இந்த உருண்டையை ஒரு பெரிய தட்டில் கொண்டு வந்து அனைத்து பிள்ளைகளும் இருக்கும் நடுவில் வைத்து விடுவார்..
இதை எழுதும் போதே.. என் நினைவு அந்த கடந்த காலத்திற்க்கு சென்று விட்டது.. இன்று போல மின்சாரம் போய் விட்டால், இன்வெட்டர் என்பது எல்லாம் கிடையாது..
அதே போல அனைவரின் வீட்டிலும் மிக்ஸி கிரைண்டர் என்பதை பார்க்க முடியாது… அதனால் கரண்ட் போய் விட்டதே.. என்ன என்று என் அம்மா பயந்து விடாது.. இந்த காலம் போல பேக்கரி எல்லாம் திரும்பிய பழக்கமும் இல்லை.. அதோடு பேக்கரி பொருட்களுக்கு செலவு செய்யும் அளவுக்கு வருமானமும் இல்லை என்பதினால், குழந்தைகளுக்கு தானே ஏதாவது வீட்டில் இருக்கும் பொருளை வைத்து செய்து கொடுத்தார்..
அந்த பொருட்கள்.
வெல்லம் - அரை கிலோ
புழுங்கல் அரிசி - இரண்டு ஆழாக்கு
ஏலக்காய் - ஆறு
தேங்காய் - அரை முடி
நெய் கைய்யில் தேய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவ்வளவே…
செய்முறை..
முதலில் அரிசியை ஒரு காய்ந்த கடாயில் வைத்து பொன்னிரமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்..
பின் அதை என் அம்மா அம்மியில் இடித்தார்கள்.. நாம் மிக்ஸியில் போட்டு மைய்யமாக அரைக்க கூடாது.. கொஞ்சம் கொர கொரப்பாக தான் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்..
பின் வெல்லத்தை பாகு எடுக்க வேண்டும்.. பாகு ஒரு பாத்திரத்தில் சிறிதளவே தண்ணீர் பிடித்து ஸ்டவ்வில் வைத்து வெல்லத்தை தூள் செய்து கொண்டு அது பாகுகாக பகுமானம்.. ஒரு சின்ன தட்டில் தண்ணீர் பிடித்து இந்த பாகு போட்டால் கரையாது அதை உருட்டுனால் உருண்டையாக வர வேண்டும்.. அவ்வளவே.. இது அதரசம் போல.. பார்த்து பார்த்து பாகு எடுக்க வேண்டும்.. என்ற அவசியம் கூட கிடையாது..
இந்த பாகுவில் அரைத்த பொறி அரிசியை போட்டு கிளரும் சமயம். தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த பாகு பொரி அரிசியில் போட்டு கொள்ள வேண்டும்.. அதே போல் தான் ஏலாக்காயும் தூள் செய்து.. அதில் போட்டு நன்றாக கிளறிய பின்..
கொஞ்சமே கொஞ்சம் ஆறவிட வேண்டும்.. ஏன் என்றால் கையில் உருண்டையாக உருட்டும் போது கை சுட கூடாது.. ஏன் என்றால் வெல்லம் கையில் பொத்தல் போடும் அளவுக்கு அதன் வெப்பம் அதிகமாக இருக்கும்..
கொஞ்சம் ஆறிய பின்.. நெய்யை கையில் தேய்த்து கொண்டு.. உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்ப சின்னதாகவே பெரியதாகவே உருண்டை செய்து சாப்பிட்டால்.. இனி நீங்கள் வாரத்திற்க்கு ஒரு முறையாவது இது போல செய்து சாப்பிடுவீர்கள்..
ஏன் என்றால் பொருளும் அவ்வளவு கிடையாது.. அதே போல செய்வதுமே மிக மிக எளிமையானது.. இன்னொன்று நான் முக்கியமாக சொல்வது என்றால், என் அம்மா மழை வரும் போது இதை செய்து கொடுப்பார்கள்..
ஆனால் நீங்கள் இந்த உருண்டை சாப்பிட மழையை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்காது செய்து சாப்பிடலாம். ஏன் என்றால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களையும் சேர்க்காது செய்வதால் உடலுக்கு நல்லது… நாவுக்கும் சுவை..
Author: Sinduja
Article Title: அரிசி பொரி உருண்டை
Source URL: Kathaiaruvi-https://kathaiaruvi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அரிசி பொரி உருண்டை
Source URL: Kathaiaruvi-https://kathaiaruvi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.